”சார் எந்திரீங்க” கிளீனர் பையன் எழுப்பின பிறகு தான் இறங்குமிடம் வந்ததே தெரிந்தது. இங்கு வருகிறேன் என்ற நினைப்பே நேற்று தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. இறங்கும் போது சுற்றி நின்றிருந்த ஆட்டோக்களில் ஒன்றை எடுத்து கம்பெனி முன் பதிவு செய்திருந்த ஹோட்டலை அடைந்தாயிற்று.
இன்று கம்பெனி மீட்டிங் முடித்த பிறகு நாளை மதியம் 2 மணிக்கு அப்படியே மும்பை கிளம்ப ப்ளைட் டிக்கட்டும் பையில் தயாராக இருக்கிறது. கம்பெனி மீட்டிங் முடிய எப்படியும் மதியம் ஆகி விடும். மதியத்திற்கு பின் அவளை பற்றி விசாரிக்க வேண்டும். அவள் வேறு வீட்டிற்கு குடி மாறி விட்டாள் என்பது தான் அவளை பற்றி நான் கேட்ட கடைசி செய்தி. இவ்வளவு பெரிய ஊரில் அதுவும் ஒரே நாளில் கண்டுபிடிப்பது சிரமம். இன்னும் வேறு வீடு கூட மாறி இருக்கலாம். விசாரிக்கலாம் என்றால் யாரிடம் விசாரிப்பது? ஐந்து வருடங்கள் சுற்றிய ஊர்; பழைய நண்பர்கள் யாரையாவது பிடித்தால் எப்படியும் விசாரித்துவிட முடியும். கண்டு பிடித்து போய் நின்றால் என்னை அடையாளம் தெரிந்து கொள்வாளா? பார்த்தால் பேசுவாளா? திருமணம் ஆகி இருக்குமா? இல்லை ஏன் வந்தாய் என சண்டைக்கு வருவாளா? தெரியாது! ஆனால் பார்க்க வேண்டும் போல இருந்தது.
இவ்வளவு நாட்கள் பார்க்கலாமா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திற்கு முடிவாக பார்த்து விடுவது என தீர்மானித்து இந்த மீட்டிங்கை ஒரு சாக்காக வைத்து இங்கு வந்திருக்கிறேன். நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஓடிவிட்டது ஆனால் அவள் மேல் இருக்கும் காதல் குறையவில்லை எனக்கு. நாட்கள் செல்ல செல்ல மறந்து விடுவேன் என்று தான் முதலில் நினைத்தேன் ஆனால் அது ஒரு புண் போல ஆகி மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து நாளுக்கு நாள் ரணம் முற்றி போய் கொண்டே தான் இருக்கிறது. அதுவும் ஒரு காரணம் இன்னும் நான் திருமணம் செய்யாமலிருக்க. அவளை கண்டுபிடித்து போய் பார்த்தால் மீண்டும் ஏற்று கொள்ள மாட்டாள் என்று தான் தோன்றுகிறது ஆனால் ஏற்று கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது என மனம் குறுக்கு உழவு ஓட்டுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அதை தவற விட கூடாது என மனம் பதைபதைத்தது. இந்த மனபோரட்டத்திலேயே இத்தனை வருடம் ஓடி விட்டது.
நேரம் ஆகிவிட்டது என குளித்து முடித்து கிளம்பும் போது ரிசப்சனில் இருந்து அழைப்பு காம்ப்ளிமெண்டரி ப்ரேக் பாஸ்ட் தயார் என்று செய்தி. சாப்பிட்டு முடிக்கும் போது கால் டாக்சி வந்திருந்தது. மீட்டிங்கிற்கு சென்றது பின் மீட்டிங் முடிந்து சாப்பிட்டு விட்டு கிளம்பியது எல்லாம் நினைவில் ஒட்டவே இல்லை. ஊரில் எங்கு பார்த்தாலும் எல்லாமே அவளை ஞாபகப்படுத்துவதாகவே தோன்றியது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நினைவு. மீண்டும் அந்த நாட்களுக்கே சென்று விட்டது போல ஒரு உணர்வு. தவறு செய்து விட்டேனோ? தவறாகவே இருந்தாலும் நடந்ததை இனி மாற்ற முடியாது. அந்த தவறை திருத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதையாவது தவற விட கூடாது என்றே பதறுகிறது. திரும்பி வரும் வழியில் அந்த பஸ் ஸ்டாப்பை பார்த்தேன். வண்டியை பக்கம் இருக்கும் பெட்டி கடையில் நிறுத்த சொன்னேன். எத்தனை நாட்கள் அந்த பஸ் ஸ்டாப்பில் இருவரும் உட்கார்ந்து பேசி இருப்போம். சரி அடுத்த பஸ்ஸுக்கு போய்க்கலாம் என்று எத்தனை பேருந்துகளை தவற விட்டிருப்போம்.
ஒரு கிங்ஸ் குடுங்க என்று வாங்கி அதை பற்ற வைக்கும் போது “மாப்ள” என்று ஒரு குரல் யார் என்று பார்த்தால் அவளின் சொந்தகார பையன் எனக்கும் நல்ல நண்பன். அவளுடன் நான் சுற்ற ஆரம்பித்த பிறகு விலக ஆரம்பித்து விட்டோம்.
எனக்கும் ஒரு கிங்ஸ் என ஒரு சிகரெட்டை வாங்கி பற்றி கொண்டே எத்தனை நாள் ஆச்சுடா, எப்படி இருக்க, எங்க இருக்க, எல்லாரும் தொடர்புல இருக்காங்க உன்னை தவிர என்று பேச ஆரம்பித்தான்.
அதே ஊர் அதே நண்பன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே ”எனக்கு இங்க தான் கம்பெனில ரூம் போட்டு இருக்காங்க, நாளைக்கு கிளம்பனும், இப்ப ப்ரியா இருக்கியா? வர்றயா சரக்கு அடிக்கலாம்” என்று கேட்டேன். ”இத்தனை நாள் கழிச்சு பாத்து இருக்கோம் நீ கூப்பிட்டு வராம என்ன பெரிய வெட்டி முறிக்குற வேலையா, வா போலாம்” என்றான். இவனிடம் பேசினால் எப்படியும் அவளை பற்றி விசாரித்து விடலாம். நாளைக்கே அவளை பார்த்தும் விடலாம். சற்று டார்ச் வெளிச்சம் தெரிவது போல தோன்றியது. இருளாகவே தெரியும் போது டார்ச் வெளிச்சம் பரவாயில்லை தான்.
ரூமிற்கு வந்த பிறகு சரக்கு உள்ளே போக போக பழம் கதைகள் பல பேசினோம். புகையும், மதுவும், மகிழ்ச்சியும் மிதமிஞ்சி போனது, இழந்தது காதல் மட்டும் அல்ல என புரிந்தது. ஆனால் எனக்கும் அவளை பற்றி எப்படி தொடங்குவது என தெரியவில்லை அவனும் அவளை பற்றி பேசாமல் தெளிவாகவே தவிர்த்து வந்தான்.
இடையில் ஆபீஸ் அழைப்புகள் வேறு; நான் போனை வெளியே செல்லும் போது ”மாப்ள, உன்னோட லேப் குடு நான் பேஸ்புக்ல உனக்கு ப்ரெண்ட் ரெக்குவஸ்ட் அனுப்புறேன்” என்றான். லேப்பை எடுத்து கொடுத்து விட்டு நான் வெளியே வந்திருந்தேன்.
அழைப்பு முடிய 20 நிமிடம் ஆகி இருந்தது. திரும்ப உள்ளே வந்து பார்த்த போது மட்டை ஆகி இருந்தான். சிகரெட் பாக்கெட்டில் இன்னும் 3 சிகரெட் இருந்தது. பக்கத்தில் இருக்கும் சேரில் உட்கார்ந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த போது மிகவும் லேசாக உணர்ந்தேன். லேப் டாப் அணைக்கபடாமல் இருந்தது. அருகில் போய் பார்த்த போது அவன் முகநூல் பக்கம் திறந்து இருந்தது. திடீர் என்று ஒரு எண்ணம் ”எப்படி இருந்தாலும் அவள் இவனுடைய நண்பர் வட்டத்தில் இருப்பாள், அதை பார்த்தால் என்ன?” என்று.
லேப் டாப்பை எடுத்து அவனது நண்பர் வட்டத்தில் தேடிய போது அவளுடைய ப்ரொபைல் கிடைத்தே விட்டது.சிகரெட் சுட்டதால் அதை அணைத்து விட்டு அவளுடைய ப்ரொபைலை திறந்து பார்த்தேன் சற்று பூசினால் போல் இருந்தாள், திருமணம் ஆகி இருந்தது. கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள், குழந்தை வேறு. மிக நெருங்கியவர்களுக்கு மட்டும் தெரிவது போல ப்ரைவசி செட்டிங்கில் சில புகைப்படங்கள்.
நெடுநாள் படுக்கையில் இருந்தவன் இறந்தது போல ஒரு ஆசுவாசம். நான் நினைத்தது போல் நடந்ததை திருத்தி கொள்ள இனி எந்த வாய்ப்பும் இல்லை. இழந்தது இழந்தது தான். அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்ற சந்தோசம் ஒரு பக்கம். இனி நெருடல் இல்லை. மிச்சம் இருக்கும் சிகரெட்டுகளில் ஒன்றை எடுத்து பற்ற வைத்து ஆழமாக இழுத்து புகை விட்டதில் மன உறுத்தலும் வெளியே சென்றது போல ஒரு உணர்வு. அவன் தெரிந்தே தான் முகநூலை மூடாமல் படுத்து இருக்கிறான் என்றே பட்டது எனக்கு.